செவ்வாய், அக்டோபர் 28 || போராடி ஜெபிப்பதிலுள்ள ஆசீர்வாதம்!
- Honey Drops for Every Soul

- Oct 28
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: ஆதியாகமம் 32: 22-30
... நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்.
- ஆதியாகமம் 32: 26
ஏசா தன்னைச் சந்திக்க நானூறு பேரோடு புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறான் என்ற செய்தி யாக்கோபை பயமுறுத்தியது. தன்னைப் பழிவாங்கவே அவன் வருகிறான், தன் வாழ்வு முடிவுறப் போகிறது, தப்ப வழியேயில்லை என்று நினைத்து கலங்கிய யாக்கோபு கர்த்தரிடத்தில் முறையிட்டுக் கொண்டிருந்தான். அன்று இரவில் அவன் தனித்திருந்த வேளையில் ஒரு புருஷன் அவனோடு இரவுமுழுவதும் போராடினார். அவர் வேறு யாருமல்ல. ஆண்டவராகிய கர்த்தர்தான்! அது தெரியாமல் யாக்கோபு அவரோடே விடாமல் போராடினான். விடியும் சமயம் அவர் போக எத்தனித்தபோது அவன், நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். அன்றிரவு அவன் ஆண்டவரோடு போராடிக்கொண்டே இருந்தபோது, ஆண்டவர் அவனை நோக்கி, உன் பெயர் என்ன என்று கேட்டார். அப்போதுதான் தான் ஒரு ஏமாற்றுக்காரனாக, திட்டம் தீட்டி, பொய் சொல்லி சுயலாப நோக்குடன் செயல்பட்டது அவனுக்குப் புலப்பட்டது. ஆனாலும் அவரிடமிருந்து ஆசீர்வாதத்தைப்பெற்றுக்கொள்வதில் அவன் தீவிரம் காட்டினான். அவனுடைய தொடர் போராட்டம், அவரிடமிருந்து இஸ்ரவேல் என்ற புதுப் பெயருடன், சுயத்திலிருந்து விடுதலை, புதுவாழ்வு ஆகியவற்றையும் பெற்றுக்கொள்ள உதவியது.
நண்பர்களே, நம்மைக் கர்த்தர் ஆசீர்வதிக்கவேண்டும் என்றால், நமது சுயரூபம் மாறவேண்டும் என்றால் அவர் நம்மை ஆசீர்வதிக்கும்வரை ஜெபத்தில் அவரை விடாமல் உறுதியாகப் பற்றிக்கொள்ளவேண்டும். நமது வாழ்க்கை சிறக்க அதுவே ஒரே வழி. அவர் ஒருவரே நம்மை மாற்றி, நமக்குப் புதுவாழ்வு அளிக்க வல்லவர்.ஜெபம்: தேவனே, யாக்கோபு தனித்திருந்து தன்னிலையறிந்து உம்முடன் போராடி ஜெபித்தபிறகுதான் அவன் மெய்யான ஆசீர்வாதங்களைப் பெற்றான். என்னையும் நீர் மாற்ற, நானும் ஜெபத்தில் உம்முடன் போராடி விடுதலையையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள உமது அளவற்ற கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments