வியாழன், ஆகஸ்ட் 28 || ஜெபமின்மை+கண்ணீரற்ற கண்கள்=அழியும் உலகம்!
- Honey Drops for Every Soul

- Aug 28
- 1 min read
வாசிக்க: 1 இராஜாக்கள் 18: 30-46
எலியா.. மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது .. பூமியின்மேல் மழை பெய்யவில்லை. - யாக்கோபு 5:17
ஆகாபின் காலக்கட்டத்தில், கர்த்தரின் தீர்க்கதரிசியான எலியா எழும்பி, மெய்யான தெய்வமாகிய கர்த்தரே உண்மையில் மழையையும் விளைச்சலையும் தருபவர் என நிரூபிப்பதற்காக அடுத்த மூன்று வருடங்கள் தேசத்தில் மழைபெய்யாது என்று சவால் விடுத்தான். அவனது வார்த்தையின்படியே கர்த்தர் வானத்தை அடைத்து தேசம் முழுவதிலும் பெரும் பஞ்சம் வரும்படி செய்தார். மூன்று வருடம் முடிவடையும் தருணத்தில் மறுபடியும் எலியா ஆகாபுக்கு தன்னை வெளிப்படுத்தி, 450 பாகால் தீர்க்கதரிசிகளை கர்மேல் மலையின்மீது கூட்டும்படியும், பலிபீடத்தின்மேல் பலியைத் தயாராக வைக்கும்படியும் கூறினான். வானத்திலிருந்து அக்கினியை இறக்கி உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்று சவாலும் விடுத்தான். முதலில் தங்கள் தெய்வத்தைக் கூப்பிடும்படி பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கு முதல் வாய்ப்பைக்கொடுத்தான் எலியா. அந்த தீர்க்கதரிசிகள் மதியம்வரை தங்கள் தெய்வத்தைக் கூப்பிட்டும் ஒரு பதிலும் வரவில்லை. அந்திப்பலி நேரம் வந்தபோது எலியா வந்து, பலிபீடத்தைச் செப்பனிட்டு, பரிசுத்தப்படுத்தி, அதைச்சுற்றிலும் வாய்க்காலை வெட்டி, தண்ணீரால் நிரப்பி, துண்டித்த காளையை விறகின்மேல் வைத்து, கர்த்தரை நோக்கி ஓர் சிறிய ஜெபம் செய்தான். உடனே வானத்திலிருந்து அக்கினி இறங்கி பலியைப் பட்சித்து, அதோடேகூட எல்லாவற்றையும் நக்கிப்போட்டது. பாகாலின் தீர்க்கதரிசிகள் அதிர்ந்துபோயினர். இஸ்ரவேல் மக்கள் முகங்குப்புற விழுந்து, கர்த்தரே தெய்வம் என்று கூறி அவரைப் பணிந்துகொண்டனர். எலியா அத்துடன் நிற்கவில்லை மறுபடியும் ஜெபித்தான். கர்த்தா வானத்தைத் திறந்து மழையை வருஷிக்கப்பண்ணி தாமே தேவன் என்பதை நிரூபித்தார்.
அன்பானவர்களே, மக்களை ஜெபத்திற்கு நேராக நடத்தும் தலைவனே உலகம் அதிசயிக்கத்தக்க எழுப்புதலைக் கொண்டுவர, கர்த்தரால் பயன்படுத்தப்படுவான் என்று லியோனார்ட் ரேவன்ஹில் எழுதுகிறார். ஆம்! எழுப்புதல் வரத் தாமதிக்கிறது என்றால் அதற்குக் கர்த்தர் காரணமல்ல. நாம்தான் காரணம். எனவே, நாம் எலியாவைப்போல ஜெபிப்போம். அவருக்காக வைராக்கியத்துடன் எழுந்து நிற்போம். அப்போது நம்மைக்கொண்டு தாமே மெய்யான தெய்வம் என அவர் நிரூபிப்பதோடு, எழுப்புதலையும் தருவார்.ஜெபம்: கர்த்தாவே, உமது நாமம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறது. உமது வார்த்தை புறக்கணிக்கப்படுகிறது. விக்கிரக ஆராதனை கிறிஸ்தவர்களுக்கும் பரவிவருகிறது. நீர் இறங்கி வந்து அவர்களை சந்தியும்; மன்னியும்; உயிர்ப்பியும். இதற்காக ஊக்கமாக ஜெபிக்க எனக்கு கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments