வியாழன், ஆகஸ்ட் 14 || ஜெபிப்பதற்கு தீவிர முயற்சி எடுங்கள்!
- Honey Drops for Every Soul

- Aug 14
- 1 min read
வாசிக்க: அப்போஸ்தலர் 6: 1-4
அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். - லூக்கா 6:12
செய்வதற்கு எவ்வளவோ வேலை உண்டு; முக்கியமான மீட்டிங் இருக்கிறது; அலுவலகத்தில் ஃபைல்கள் ஏராளம்; வேதத்தைப் படிக்கிறதற்கும் ஜெபிக்கிறதற்கும் எங்கே நேரம் என்று சொல்பவர்கள் அநேகர். குறைநேர தியானங்கள் நம்மை ஆவிக்குரிய வறட்சிக்குள் தள்ளிவிடுகின்றன; ஆவிக்குரிய வளர்ச்சியையும் தடுத்துவிடுகின்றன. ஆவிக்குரிய அஸ்திபாரத்தைத் தகர்த்து, ஆவிக்குரிய வாழ்வின் வேரையே அறுத்தும் விடுகின்றன என்று இ எம் பவுண்ட்ஸ் கூறுகிறார்.
ஒரு வார்த்தை அல்லது ஒரு வாக்கிய ஜெபங்களைச் செய்த அநேக தேவதாசர்களை வேதத்தில் காண்கிறோமே; நாம் அப்படியிருப்பது தவறா என்று சிலர் கேட்கலாம். ஆனால், இப்படி பொது இடங்களில் சிறு ஜெபங்கள் செய்தவர்கள் எல்லாம் தனிமையில் அதிக நேரத்தை ஜெபத்தில் செலவிட்டவர்கள் என்பதுதான் உண்மை! மோசே நாற்பது நாட்கள் இரவும் பகலும் சீனாய் மலையில் கர்த்தருடன் பேசியவரல்லவா! எலியா பலிபீடத்தின் மேலிருந்த பலியின்மேல் வானத்திலிருந்து அக்கினியை இறக்க செலவிட்ட ஜெபநேரம் சிறிதேயானாலும் அவரும் சந்தேகமின்றி தனிமையில் அதிக நேரம் ஜெபித்தவர்தான்! பவுலின் ஜெபங்களில் பல சிறியவைகளாக இருந்தபோதிலும், 1 தெசலோனிக்கேயர் 3:10லிருந்து, அவர் இரவு பகலாக ஜெபித்தவர் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்டவர் இயேசு தனிமையைத்தேடி அப்புறம் சென்று பிதாவிடம் இரவு பகல் பலமணி நேரங்கள் ஜெபித்ததை வேதம் நமக்குப் பலமுறை கூறுகிறது.
அன்பு நண்பர்களே, ஜெபத்தைத் தடைசெய்யும் எல்லாக் காரியங்களையும் நாம் உடைத்தெறிவோம். குறைவான நேரமே நாம் தேவனோடு செலவிட்டால் அவரோடுள்ள உறவில் நாம் குறைவுபடுவோம். அதன் விளைவாக நம் வாழ்வின் தரமும் குன்றிப்போகும். எவ்வளவுக்கதிகமாக நாம் தேவனோடு நேரம் செலவிடுகிறோமோ, அவ்வளவுக்கதிகமாக நம் வாழ்வு நிணமுள்ளதாக, கொழுமையானதாக மாறும் என்று பவுண்ட்ஸ் கூறுகிறார். ஜெபத்தின் வல்லமையை நாம் அறிந்துக்கொள்வோம். ஜெபமே மிகப்பெரும் விளைவுகளைக் கொண்டுவரும். நாம் அதிகம் ஜெபித்து அதிக நன்மையைப் பெற்றுத் தருவோம். ஜெபம்: தேவனே, என் வேலைநேரத்தைக் கூட்டிக்கொண்டேபோகும் நான் ஜெபநேரத்தை குறைத்துவிடுகிறேன். கிருபையாக என்னை மன்னித்து, எனக்குள்ளாக ஜெபவாஞ்சையை ஊற்றும். உமது பிரசன்னத்தை வாஞ்சித்து ஜெபநேரத்தைக் கூட்டி ஊக்கமாய் ஜெபிக்க உதவிசெய்யும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments