திங்கள், ஜூலை 21 || உள்ளத்தில் வைராக்கியம் வைக்கவேண்டாம்!
- Honey Drops for Every Soul

- Jul 21
- 1 min read
வாசிக்க: ஆதியாகமம் 4: 2-12
பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்க வேண்டாம். - 1 யோவான் 3:12
உலகின் முதல் சகோதரர்களான காயீன் ஆபேலைப்பற்றி நாம் அறிந்திருக்கிறோம். இருவருமே கர்த்தருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தனர். கர்த்தரோ ஆபேலின் காணிக்கையை ஏற்று காயீனுடையதை நிராகரித்தார். ஏன்? காணிக்கையைப் பார்த்தல்ல, காணிக்கையைச் செலுத்தினவனுடைய இருதயத்தைப் பார்த்தே அப்படி செய்தார். காயீனுடைய இருதயம் பொல்லாங்கானதாயிருந்தது. எபிரெயர் 11:4ல், விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான், அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான் என்று கூறப்பட்டிருக்கிறதே! காயீனின் காணிக்கையைக் கர்த்தர் புறக்கணித்ததால் அவனுக்கு கோபம் மூண்டது. தன் சகோதரன்மேலிருந்த வெறுப்பை மறப்பதற்கு பதில் வளர்த்துக் கொண்டதனிமித்தம் அவனைக் கொலை செய்யத்திட்டமிட்ட அவன், ஆபேலைக் கொலை செய்வதற்குள் அவனை மானசீகமாக பலமுறை கொலை செய்திருப்பான் என்பது நிச்சயம். ஒருநாள் அவனை பொய்சொல்லி நயவஞ்சகமாக வயலுக்கு அழைத்துச்சென்று அவனது குற்றமில்லாத இரத்தத்தை சிந்திவிட்டான் காயீன்.
கொலைசெய்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு அவனிடத்தில் சற்றேனும் இல்லை. மாறாக கர்த்தருக்கு முன்பாகத் தன்னைக் குற்றமற்றவனாகக் காண்பிக்க அவன் முயற்சித்தான். ஆனால் அவர் கண்களுக்கு எதுதான் தப்பமுடியும். அவர் நீதியுள்ள நியாயாதிபதியாயிற்றே! எனவே, காயீன் அவரது சாபத்தைப் பெற்றான். (ஆதியாகமம் 4:11,12) நாம் ஒருவேளை நமது வாழ்வில் யாரையும் கொலைசெய்யாமலிருக்கலாம். ஆனால் நமது உள்ளத்தில் வெறுப்பையும் கசப்பையும் வைத்திருந்தோமானால் அதைக் கொலைக்குச் சமமாகவே கருதுவார் நம் தேவன். எனவே, பிசாசு நம்மைத் தூண்டிவிட்டுவிடாதபடிக்கு நாம் ஜாக்கிரதையாயிருப்போம். ஜெபம்: ஆண்டவரே, காயீனின் பொறாமை அவனது கோபத்தைத் தூண்டி கொலைவரை கொண்டுசென்றது என்று அறிந்தேன். என் கட்டுக்கடங்காக் கோபத்தை, எரிச்சலை உள்ளத்திலிருந்து எடுத்துப்போட்டு, உமக்கு முன்பாக பிரியமான வாழ்க்கை வாழ எனக்கு கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments