ஞாயிறு, ஜூலை 20 || கண்களைப் பரத்துக்குநேராய் திருப்புங்கள்!
- Honey Drops for Every Soul

- Jul 20
- 1 min read
வாசிக்க: ஆதியாகமம் 13: 1-13
இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்?.. அது ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம். - நீதிமொழிகள் 23:5
சொத்துப்பிரியர்கள் அநேகக் குடும்பங்களில் சொத்துத் தகராறுகளை ஏற்படுத்திவிடுவதை நாம் காணலாம். இதுதான் லோத்து ஆபிரகாமின் வாழ்விலும் நடந்தது. ஊர் தேசத்திலிருந்து புறப்படும்போது அவர்கள் மனமொருமித்திருந்தனர். ஆனால், நாட்கள் செல்லச்செல்ல, அவர்களது சம்பத்து பெருகினபோது, இருவருக்குமிடையே பிரச்சனைகள் தோன்றின. அவர்களுடைய வேலைக்காரரிடையே மோதல்கள் ஏற்பட்டன. எனவே, ஆபிராம் லோத்திடம், நமக்குள் வாக்குவாதம் தேவையில்லை நாம் சகோதரர்; எனவே, நாம் பிரிந்துவிடலாம் என்று கூற, லோத்து உடனே, பசுமையான புல்வெளிகள் நிறைந்த யோர்தானின் சமவெளியைக் கண்டு இச்சித்து, சோதோமுக்கு அருகாமையிலிருந்த அதை சுதந்தரித்துக்கொண்டான். ஆனால் நடந்தது என்ன? கர்த்தரின் கோபாக்கினை சோதோமை அழித்துப்போட்டது.
அன்பானவர்களே, முதலில் லோத்து சோதோமை நோக்கி தன் கண்களை ஓடவிட்டான். (ஆதியாக 13:10) பின்னர் அதை நோக்கி நடந்தான். (ஆதியாகமம் 13:11,12) அதன்பின் அதற்குள்ளே நுழைந்தான். (ஆதியாகமம் 14:12) அவன் ஒரு நீதிமானாயிருந்தும், தேவனுடனான உறவைப் பலப்படுத்திக்கொள்ளாமல், உலகத்தை நேசித்தான். அதனைப் பயன்படுத்தி பிசாசு அவனை முற்றிலுமாய் அழித்துப்போட்டான்.
ஜெபம்: தேவனே, பிசாசு ராஜ்யங்களின் மேன்மையையெல்லாம் இயேசுவுக்குத் தருவதாகக் கூறியபோது, அவர் உறுதியுடன் நின்று சோதனையை வென்று அவனை விரட்டினாரே! அப்படியே நானும் அவரைப்போல பரத்தின்மேல் கண்பதித்து அவனது சோதனையை வெல்லக் கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments