சனி, மார்ச் 15 || தாழ்மையாயிருக்க நாம் ஆயத்தமாயிருக்கிறோமா?
- Honey Drops for Every Soul

- Mar 15, 2025
- 2 min read
வாசிக்க: பிலிப்பியர் 3: 5-11
அவர் ... மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். - பிலிப்பியர் 2:8
தேவனுடைய பரிசுத்தவான்களின் மிக உன்னத பண்பு தாழ்மையே. தாழ்மையினது மேன்மையைப் பற்றிப் பேசினது மட்டுமல்ல, தாழ்மையைத் தமது வாழ்விலும் கடைப்பிடித்தார் இயேசு; முக்கியமாய் சீஷர்களோடு தாம் போஜனம்பண்ணின கடைசிப் பந்தியிலும் தாழ்மையை அவர் வெளிப்படுத்தினார். முனைவர் சாமுவேல் லோகான் ப்ரெங்கிள் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் அறிவார்ந்த மாணவரும், மிகச் சிறந்த பேச்சாளருமாயிருந்தார். அவர் பட்டம் பெற்ற பின்பு ஒரு செல்வாக்கு உள்ள சபையில் பிரசங்கம் பண்ண அழைப்புப் பெற்றார். ஆனால் அவரது இருதயத்திலே ஒரு வெறுமையும், அதிருப்தியும் இருந்தது. அந்த சமயத்தில் இரட்சண்ய சேனையைப்பற்றிய, இங்கிலாந்து தேசத்தில் வசிக்கின்ற சமுதாயத்தின் அடித்தட்டிலுள்ள மக்கள் மத்தியில் அவர்கள் செய்கின்ற ஊழியத்தைப் பற்றிய கட்டுரையை அவர் வாசிக்க நேர்ந்தது. இப்படிப்பட்ட ஊழியத்தைச் செய்ய தன்னை அழைக்கிறார் கர்த்தர் என்று உணர்ந்தார் அவர். உடனே, சபை ஊழியத்தை அவர் ராஜினாமா செய்துவிட்டு, லண்டன் மாநகருக்குக் கப்பல் பயணம் செய்து, இரட்சண்ய சேனையின் ஸ்தாபகர் ஜெனரல் வில்லியம் பூத் அவர்களைச் சந்தித்து, அவரோடு பணிசெய்யத் தன்னை ஒப்புக்கொடுத்தார். அவரும் இவரை ஏற்றுக்கொண்டு, காவல் படையின் பயிற்சி முகாமிலுள்ள மாணவர்கள் பலருடன் தங்க வைத்தார். அவர்களுக்கு அதிக ஆர்வமிருந்தும், முறைசார் கல்வியை அவர்கள் பெறவில்லை. ப்ரெங்கிள் பெற்ற முதல் பணி, மாணவர்களது சேறுபடிந்த காலணிகளைத் துடைப்பதுதான். சேற்றை அவர் துடைத்தபோது, அவருடைய உள்ளத்தில் கோபம் மூண்டது. இதற்காகத்தானா நேர்த்தியான சபையின் பணியை விட்டு, லண்டன் மாநகருக்கு வந்தேன் என நினைத்து, சோதனைக்காரனுடைய சத்தத்துக்கு அடிபணியும் நிலைக்கு வந்துவிட்டார். அப்போது அவருக்கு ஒரு வசனம் நினைவில் வந்தது. (அவர்) ஒரு சீலையைக் கட்டிக்கொண்டு ... (யோவான் 13:4) உடனே, அவர் பிசாசின் தந்திரத்தையுணர்ந்து, இருதயத்தின் ஆழத்திலிருந்து, ஆண்டவரே, நீரே ஒரு சீலையை எடுத்துக்கொண்டு, உமது சீஷர்களின் கால்களைக் கழுவினது உண்டானால், நான் ஏன் என் சக மாணவர்களின் காலணிகளது அழுக்கைத் துடைக்கக் கூடாது? என்று கதறினார்!
அன்பர்களே, பெருமை தூதர்களைப் பிசாசுகளாக மாற்றியது; தாழ்மையோ மனுஷரைத் தூதர்களாக்குகிறது என பரிசுத்த அகஸ்டின் கூறினார். ஆண்டவரின் தாழ்மையை நம் வாழ்வில் நாமும் பின்பற்றி, அவரது சீஷர்கள் நாம் என்பதை இவ்வுலகுக்கு நிரூபிப்போம்!
ஜெபம்: ஆண்டவரே, பிறருக்கு முன் என் நிலை தாழ்த்தப்பட்டால் அதற்கு நான் அவமானப்படத் தேவையில்லை. என் சகாக்கள் மற்றும் எனக்கு கீழிருப்பவர்கள் முன்னால் என்னை நான் தாழ்த்திக்கொள்வேன். உமது சீஷர்களின் கால்களைக் கழுவிய உம் செயல் என் உள்ளத்தை உருக்கிற்று. அதுவே என் ஊக்கம்! ஆமென். தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments