சனி, செப்டம்பர் 20 || உத்தமமாய் நடந்தால் உன்னதருடன் நடக்கலாம்!
- Honey Drops for Every Soul

- Sep 20
- 1 min read
வாசிக்க: சங்கீதம் 15
.. யார் (கர்த்தருடைய) பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனு(மே)... - சங்கீதம் 24:3,4
காவல்துறையில் பணிசெய்துகொண்டிருந்த ராபர்ட் ஓய்வுபெற ஐந்து வாரங்களே இருந்த நிலையில், ஒரு பிளாஸ்டிக் பையில் முக்கியமான இராணுவ இரகசியங்கள் அடங்கிய ஆவணங்களை மறைத்து வைத்துக்கொண்டிருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டார். ரஷ்ய ஒற்றர்களைக் கண்டுபிடிக்க வேண்டிய அவரே, ரஷ்யாவிற்கு அனுப்புவதற்காக இந்த ஆவணங்களைத் திருடியது எத்தனை பெரிய தேசத்துரோகம்! இந்தக் காரியத்தைச் செய்வதற்காக 40 இலட்சம் டாலர்கள் மதிப்புள்ள வைரமும் பணமும் அவர் லஞ்சமாகப் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. அவர் நல்ல தகப்பனாக, நல்ல கணவனாக, நல்ல ஊழியனாக, நல்ல மகனாக சமுதாயத்தில் மதிக்கப்பட்டவர். அவர் கைது செய்யப்பட்டபோது அவரது தாயார், என் மகன் எப்போதும் உத்தமமாய் வாழ்ந்தவன். அவன் எப்படி இதைச் செய்தான் என்று புரியவில்லை என்றார். இவ்வளவு நல்ல பெயரைப் பெற அவர் 25 ஆண்டுகள் கடினமாக உழைப்பதாகக் காட்டிக்கொண்டார். அதுதான் ஒரு ஒற்றனுக்குத் தேவையான குணம். இராணுவத்தில் பணியாற்றிக்கொண்டே, 15 ஆண்டுகள் ரஷ்யநாட்டுக்கு இராணுவ ஆவணங்களை அவர் இரகசியமாக அனுப்பிக்கொண்டிருந்திருக்கிறார்! அவரது முகமூடி அணிந்த இரட்டை வாழ்க்கைதான், அவர் கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட அநேகரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அன்பானவர்களே, ஏமாற்றுகின்ற குணம் நம் கூடப்பிறந்தது என்றால் அது மிகையல்ல. நாம் சபைக்கு ஒழுங்காகச் சென்றாலும், ஜெபித்தாலும், உபவாசித்தாலும், நன்மையான செயல்களைச் செய்தாலும், நமக்குள்ளாக உத்தமம் இல்லையென்றால் பயன் ஒன்றுமில்லை. தானியேல் தீர்க்கதரிசி ஒருபோதும் இரட்டை வாழ்க்கை வாழவில்லை. அவனது எதிரிகள் அவனை எந்தவிதத்திலும் குற்றப்படுத்த முடியவில்லை. நாம் எப்படி? நியாயத்தீர்ப்பின் நாளில் நாம் எல்லோருமே ஆண்டவருக்குக் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். இதுவரை இரட்டை வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தால் உடனே மனம் வருந்தி அவரிடம் மன்னிப்பு கேட்கவும், யாருக்குத் தவறிழைத்தோமோ அவர்களுக்கு பிரதியுபகாரம் செய்யவும், இனி உத்தமத்துடன் வாழவும், கர்த்தர் தமது கிருபையை நமக்கு நிறைவாக அளிப்பாராக. ஜெபம்: தேவனே, நான் மற்றவர்களை ஏமாற்றிக்கொண்டு சட்டத்தின் கண்களிலிருந்தும் தப்பித்துக் கொண்டிருந்தாலும் உமது பார்வையிலிருந்து என்னால் தப்பமுடியாது. இரட்டை வாழ்க்கை வாழும் என்னை மன்னியும். இனியாவது முகமூடி அணியாமல் நேர்மையுடன் வாழ உதவி செய்யும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments