சனி, ஆகஸ்ட் 02 || பரிசுத்த ஆவியானவருக்கு இசைந்துபோக வேண்டும்
- Aug 3, 2025
- 1 min read
வாசிக்க: ரோமர் 12: 1-2
ஆவியை அவித்துப்போடாதிருங்கள். - 1 தெசலோனிக்கேயர் 5:19
விசுவாசிக்குள் இருக்கும் பரிசுத்தஆவியின் உள்ளார்ந்த பிரசன்னம்தான், அவனுக்கு ஆவிக்குரிய வழிகாட்டுதல் மற்றும் வல்லமையைக் கொடுக்கின்ற சற்றும் குறைவுபடாத, நிலையான ஆதாரமாயிருக்கிறது. பரிசுத்தஆவியானவரின் ஊழியம் தானாய் செயல்படுவதில்லை; நம்முடைய ஒத்துழைப்பும் தேவையாய் இருக்கிறது. எனவேதான், ஆவியை அவித்துப்போடாதிருங்கள் என்று நாம் 1 தெசலோனிக்கேயர் 5:19ல் வாசிக்கிறோம். அவித்து போடுதல் என்பது எரிகின்ற தீயை அணைத்துப்போடுவது அல்லது குறைத்துவிடுவது என்று அர்த்தப்படுகிறது. எனவே, பரிசுத்த ஆவியை அவித்துப்போடுவது என்றால் குறைத்துப் போடுவது அல்லது ஒரு விசுவாசியிடம் ஆவியானவர் செய்யும் ஊழியமாகிய கிரியையை தடுத்துவிடுவது என்று அர்த்தப்படும். வேறுவிதமாகச் சொன்னால், அது - ஆவியானவரின் சித்தத்தை வேண்டாம் என்று கூறி, அதற்குப் பதிலாக மனுஷ சித்தத்தை வைத்துவிடுவது. இதற்கு நேர் எதிரானது - தேவ சித்தத்துக்கு இசைந்துகொடுப்பது. தேவசித்தத்துக்கு இசைந்து கொடுப்பது என்பது, முதலாவது தேவ வார்த்தைக்கு இசைந்துகொடுப்பது, இரண்டாவது, பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலுக்கு இசைந்துகொடுப்பது. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே! பிலிப்பியர் 2:511, அவர் தமது பிதாவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மைத்தாமே தாழ்த்தினார். இங்கே பிதா அவர் எப்படியிருக்க வேண்டும் என்று விரும்பினாரோ அப்படியே இருக்க அவர் விரும்பினார்; அவர் என்ன செய்யவேண்டும் என்று பிதா விரும்பினாரோ அப்படியே செய்ய விரும்பினார் அவர்; பிதா அவர் எங்கு போகவேண்டும் என்று விரும்பினாரோ, அங்கே செல்ல விரும்பினார் அவர்.
அன்பானவர்களே, நாம் கர்த்தரின் சித்தத்துக்குள்ளாக இருக்கும்போது, நம் மாம்சத்துக்கடுத்த சில காரியங்களை நாம் விட்டுவிட வேண்டியிருக்கும். கிறிஸ்துவைப்போலவே நாமும்கூட, என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று நிச்சயமாய்ச் சொல்லவேண்டும். (லூக்கா 22:42) நாம் நமக்குள் வாசம்செய்யும் பரிசுத்த ஆவியானவருக்கு இசைந்துகொடுத்து, நம் வாழ்வை அவர் முழுவதுமாய் கட்டுப்படுத்த விட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.ஜெபம்: ஆண்டவரே, என் சித்தத்தை உம் சித்தத்துடன் இசைவாக்க நீர் உதவி செய்யும். என் சரீரத்தை அநீதியின் ஆயுதமாய் ஒப்புக்கொடாமல், ஒருமுறை என்னை உம்மிடம் முழுமையாய் ஒப்படைப்பேன். உமது பரிசுத்த ஆவியானவர் என் வாழ்வை நடத்தி, என் நடைகளுக்கு அனுதினமும் வழிகாட்டட்டும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments