செவ்வாய், ஜூன் 24 || அவிசுவாமும் பொறுமையின்மையும் தவறு!
- Honey Drops for Every Soul

- Jun 24
- 1 min read
வாசிக்க: 1 சாமுவேல் 13: 1-15
சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். - எபிரெயர் 3:12
சவுலின் இருதயம் அவிசுவாசம், பொறுமையின்மை, கள்ளத்தனம் ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்பட்டது. மிகுதியான இராணுவத் தளவாடங்களுடன் எண்ணற்ற பெலிஸ்தர் மிக்மாசில் பாளயமிறங்கியிருந்தனர். இதைக்கண்ட சவுலின் படையிலிருந்த மூவாயிரம் வீரர்களும் கதிகலங்கிப்போயினர். அநேகர் அங்கிருந்து ஓடி குகைளிலும் குன்றுகளிலும் ஒளிந்துகொண்டனர். சவுலிடம் தரித்திருந்தது அறுநூறு வீரர்கள் மட்டுமே! கர்த்தருக்கு பலிசெலுத்தாமல் போருக்குச்செல்ல சவுலுக்கு விருப்பமில்லை. எனவே, தான் சொல்லியபடி ஏழு நாட்கள் கடந்தபிறகும் சாமுவேல் வராததைக்கண்டு, பொறுமையிழந்துபோன அவன், பலியிடுவது ஆசாரியர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட சிலாக்கியம் என்று அறிந்திருந்தும் துணிச்சலாக தானே பலியைச் செலுத்தினான். அவன் பலிசெலுத்தி முடிக்கவும் சாமுவேல் வருவதற்கும் சரியாக இருந்தது. (1 சாமுவேல் 13:10) சாமுவேலைக் கண்ட சவுல், தான் செய்த தவறை நியாயப்படுத்த முயற்சித்தான். சாமுவேல் தாமதமாக வந்ததையும், படைவீரர்கள் தன்னைவிட்டு ஓடிப்போனதையும் காரணம் காட்டினான். தன் தவற்றுக்கு மற்றவர்களைக் காரணம் காட்டியபடியால் அவனது ராஜ்ய பாரம் அவனைவிட்டு நீங்கிற்று. என்ன பரிதாபம்!
நண்பர்களே, சவுலின் இப்படிப்பட்ட நடக்கை கர்த்தரால் கடிந்துகொள்ளப்பட்டது. சாமுவேல் மூலமாக அவனது ராஜ்யபாரத்தை தாம் எடுத்துப்போடப்போவதாகவும் தமக்குப் பிரியமான வேறொருவனுக்கு அதைத் தரப்போவதாகவும் அறிவித்தார். எனவே, நாம் நமது அவிசுவாசத்தினால் கர்த்தருடைய கோபத்துக்கு ஆளாகிவிடாமல் ஜாக்கிரதையாக இருப்போம். நமது பொறுமையைக் காத்துக்கொண்டு அவரது நேரத்திற்கு காத்திருந்து அவரது நாமத்தை உயர்த்துவோம். நமது குற்றங்களை கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெறுவதோடு, அவிசுவாசம், பொறுமையின்மை மற்றும் குற்றஞ்சாட்டுதலைத் தவிர்த்து சாட்சியுடன் வாழ்வோம். ஜெபம்: தேவனே, மிகக்குறுகிய காலத்தில் தன் ராஜ்யபாரத்தை இழந்துபோன சவுலைக்கண்டு நான் பாடங்களைக் கற்றுக்கொள்கிறேன். அதே தவற்றை நானும் செய்யாதபடிக்கு, விசுவாசம், பொறுமை, தாழ்மையை வெளிப்படுத்தி உம் சித்தத்தையும் திட்டத்தையும் நிறைவேற்ற கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments