செவ்வாய், ஆகஸ்ட் 12 || ஜெபமே எழுப்புதலைக் கொண்டுவரும்!
- Honey Drops for Every Soul

- Aug 12
- 1 min read
வாசிக்க: அப்போஸ்தலர் 4: 23-31
அவர்கள்.. ஒருமனப்பட்டுத் தேவனை நோக்கி... ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது... - அப்போஸ்தலர் 4:24,31
எழுப்புதலுக்கான ஜெபம் மற்றெந்த ஜெபத்தைக்காட்டிலும் வித்தியாசமானது. எர்னஸ்ட் வேட்ஸ்வொர்த் என்பவர், எழுப்புதலுக்கான ஜெபம் தேவனையே அசைக்கும் சக்திகொண்டது. ஏனெனில், அந்த ஜெபம் ஊக்கமுள்ளதாக இருக்கிறது என்று கூறுகிறார். எனவேதான் இப்படிப்பட்ட ஜெபம் தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுத்தருகிறது.
எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேலர் பாடுகளிலிருந்து தங்களை விடுவிக்கும்படியாய் முறையிட்ட சத்தம் தேவனுடைய செவிகளை எட்டியது. தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். (யாத்திராகமம் 2:24) அவர்களை விடுவிக்க மோசேயை அனுப்பினார். ஆம்! நம் தேவன் எப்போதெல்லாம் தமது மக்கள் தம்மைக் கூப்பிடுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்கு உதவும்படி எழுந்திருக்கிறார்.
இரண்டாவதாக, தமக்கு முன்பாக ஜனங்கள் தாழவிழும்போது அவர் அவர்களுக்குள்ளாக ஒரு பெரிய எழுப்புதலை அனுப்புகிறார்.
மூன்றாவதாக, பரிசுத்தவான்கள் ஒருமனப்பட்டு ஜெபிக்கும்போது அவர் உடனே கிரியை நடப்பிக்கிறார். ஜோனத்தான் எடவர்ட் என்ற தேவமனிதர் மூமாக கர்த்தர் ஒரு பெரிய எழுப்புதலை இங்கிலாந்து தேசத்தில் கொண்டுவந்தார். அவரது அழைப்பை ஏற்று அநேக ஜெபக்குழுக்கள் இங்கிலாந்து தேசம் முழுவதும் ஆரம்பிக்கப்பட்டன. இரவு முழுவதும் ஜனங்கள் கூடி ஜெபித்ததினால் தேசம் அசைந்தது.
நான்காவதாக, தன்னலமற்ற ஜெபங்களை நாம் ஏறெடுக்கையில் கர்த்தர் உடனே ஜெபத்துக்குப் பதிலளிக்கிறார். பொன் கன்றுக்குட்டியைச் செய்து தொழுதுகொள்ள ஆரம்பித்ததைக்கண்ட தேவன் அவர்கள்மேல் கடுங்கோபம் கொண்டு அவர்களை அழித்துவிடத் தீர்மானித்தார். ஆனால் மோசே, தன்னைத் தாழ்த்தி, தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளும்; இல்லாவிட்டால் உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்று ஜெபித்தான். (யாத்திராகமம் 32:32) இது தன்னலமற்ற ஜெபம் என்பதால் கர்த்தர் இஸ்ரவேலரை அழிக்காமல் விட்டார்.
அன்பானவர்களே, எனவே, நாம் கூடி ஜெபித்து ஆண்டவரது பிரசன்னைத்தையும் அவரது எழுப்புதலையும் கொண்டுவருவோம். ஜெபம்: பிதாவே, எனது ஆழமற்ற ஜெபவாழ்வு இன்றோடு மறையட்டும். எனக்கு ஒரு விசேஷித்த ஜெபஆவியைத் தந்து தேசத்தின் எழுப்புதலுக்காக ஊக்கமாக மன்றாட உதவிசெய்யும். என் ஜெபத்தைக் கேட்டு நீர் இரங்கி அழிந்துபோகும் ஆத்துமாக்களை இரட்சித்து தேசத்தில் எழுப்புதலைத் தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments