top of page

வெள்ளி, ஜூலை 04 || விசுவாசிகள் நித்திய ஆக்கினைக்குப் பயப்படவேண்டாம்

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • 10 hours ago
  • 1 min read

வாசிக்க: ரோமர் 8: 1-4


கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து ... நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. - ரோமர் 8:1


தேவனுடைய நியாயத்தீர்ப்பு விசுவாசிகளுக்கு இன்றும் என்றும் வருவதில்லை என்று பவுல் கூறுகிறார்! கிறிஸ்துவுக்கு உட்பட்டவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை; காரணம், கிறிஸ்து நமக்காக ஆக்கினைத்தீர்ப்படைந்தார். நமது தண்டனையைக் கிறிஸ்து சுமந்துகொண்டதால் நமக்கு தண்டனை இல்லை. கிறிஸ்துவுக்குட்பட்டவர்களுக்குக் கிடைக்கின்ற சொல்லிமுடியாத பாக்கியமும் ஆறுதலும் இதுவே என்கிறார் மாத்யூ ஹென்றி. கலாத்தியர் 3:13-14ல், நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மைக் கிறிஸ்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டதால்தான் நமக்கு ஆக்கினைத்தீர்ப்பு இல்லை என்பதைப் பவுல் விளக்குகிறார்! நம்மை விடுவிக்க அவர் மீட்பிற்கான கிரயத்தைச் செலுத்தினார். அவர் நமக்காக சாபமானார்!  கிறிஸ்து இல்லாமல் கிறிஸ்தவராக இருப்பது ஒருவருக்கும் சாத்தியமாகாது. அவரில் கிறிஸ்து இருந்தால், கிறிஸ்துவுக்குரியது அனைத்துமே அவருக்கும் உண்டு  தேவன் கிறிஸ்துவின்மேல் நம் பாவங்கள் அனைத்தையும் சுமத்தினதால், நம் பாவங்கள் இனி நம்முடையதல்ல, அவைகள்  கிறிஸ்துவினுடையது! அதற்கு மாறாக, கிறிஸ்துவிலுள்ள நீதி அனைத்தும் நமதாகிவிடுகிறது.


அன்பானவர்களே, கிறிஸ்துவுக்குள் என்பதில் வெவ்வேறு அளவுகள் இல்லை. ஒன்று கிறிஸ்துவுக்குள் ஒருவர் இருக்கலாம், அல்லது இல்லாதிருக்கலாம். (1 கொரிந்தியர் 15:22) நீங்கள் விசுவாசியானால், தேவனிடத்திலிருந்து ஆக்கினைத்தீர்ப்பு வந்துவிடுமோ என்று கவலைப்படவேண்டாம். நீங்கள் ஆதாமில் இருந்தபோது, நீங்கள் நல்லவர் என்று எவ்வளவு எண்ணினாலும்   ஆக்கினைத்தீர்ப்புக்கு உட்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆனால், இப்போது நீங்கள் கிறிஸ்துவுக்குட்பட்டவர்களாயிருப்பதால் இனி உங்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு வருவதில்லை. இதுதான் சுவிசேஷம்! இதுவே நற்செய்தி! நீதிமன்றம் ஒருவனைக் குற்றவாளி என்று கண்டால், அவனுக்கும் தண்டனை நிச்சயம். ஆனால் தேவராஜ்யத்தில் நடக்கும் அருமையான காரியம், நம் பாவங்களை நாம் ஒப்புக்கொண்டு அறிக்கையிட்டால் நமக்கு இரக்கம் காண்பிக்கப்படும்! நித்திய மரணத்தை பாவிகளான நாமும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்; ஆனால், இயேசுவினது இரத்தத்தினால் நம் பாவத்தின் தண்டனை ரத்து செய்யப்பட்டு, நாம் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்கிறோம். 

ஜெபம்:  ஆண்டவரே, நீர் கொடுத்த இலவசமும் முழுமையுமான மன்னிப்புக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவராகிய இயேசுவே, நீர் இரத்தம் சிந்தி எனக்காக கல்வாரியில் மரித்தீர்; அங்கே எல்லா பாவங்களுக்கான பாவமன்னிப்பு எனக்கு கிடைத்தது. நான் மன்னிப்பு பெற்றதால் இனி எனக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை. என்னை முழுவதுமாய் மீட்ட உமது கிருபைக்காக நன்றி. ஆமென்.



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page