வெள்ளி, ஆகஸ்ட் 01 || அவரை முதலில் வைப்போருக்குத் தேவன் சிறந்ததைத் தருவார்
- Aug 1, 2025
- 1 min read
வாசிக்க: யோபு 1: 1-5
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
- மத்தேயு 6:33
வேதத்திலுள்ள பரிசுத்தவான்கள், தங்களது வாழ்விலே தங்கள் வழியையல்ல தேவன் அனுமதிக்கும் வழியை பின்பற்ற அதிகம் விரும்பினார்கள். அதிகாலையில் பொழுதுபுலரும்போதே எழுந்து, தேவனை ஆராதித்து, அவர் நடத்துதலை நாடினார்கள் அவர்கள். உதாரணத்துக்கு,
ஆபிரகாம் விடியற்காலத்தில் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போனான். (ஆதியாகமம் 19:27)
அதுபோல, யாக்கோபு இரவு கண்ட சொப்பனத்தில் தேவதூதர்களைப் பார்த்தபின், அதிகாலையிலே எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து தூணாக நிறுத்தினான். (ஆதியாகமம் 28:18)
அதிகாலமே எழுந்திருந்து கர்த்தர் சமுகத்தில் நிற்க மோசே சீனாய் மலைக்குப் போனான். (யாத்திராகமம் 34:4)
யோசுவா எரிகோவைப் பிடிப்பதற்காகப் போகும்போது அதிகாலமே எழுந்திருந்தான். (யோசுவா 6:12)
கர்த்தர் சித்தத்தை அறிந்துகொள்வதற்காக, கிதியோன் காலமே எழுந்திருந்து, மயிருள்ள தோலைச் சோதித்துப்பார்க்க தான் அதைக் களத்திலே போட்டிருந்த இடத்துக்குப் போனான். (நியாயாதிபதிகள் 6:38)
அன்னாளும் எல்கானாவும் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள் என்று 1 சாமுவேல் 1:19 கூறுகிறது.
யோபு தன் படுக்கையிலிருந்து அதிகாலமே எழுந்து தனது பிள்ளைகளுக்காக கர்த்தருக்குத் தகனபலிகளைச் செலுத்துவான். (யோபு 1:5)
மாற்கு 16:2, யோவான் 20:1, லூக்கா 24:1, மத்தேயு 28:1 என்ற பகுதிகளில் சொல்லியிருக்கிறபடி, இரட்சகரை உண்மையாய்ப் பின்பற்றின பெண்கள், வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையில் சூரியன் உதயமாகிறபோது கல்லறைக்குப் போனார்கள்.
அன்பானவர்களே, நாம் செய்கின்ற காரியங்களிலே தேவன் முதலிடம் வகிக்கிறாரா? நாம் அதிகாலையில் எழுந்து, தேவ வார்த்தையை வாசிக்கிறோமா, ஜெபிக்கிறோமா, அவரது சித்தத்தை நாடுகிறோமா? நம் சுயத்தின் திருப்தியை, மனுஷரின் கரகோஷத்தை, செல்வத்தின் பதுக்கலை நாடுகிறோமா, அல்லது இரட்சகரின் அங்கீகாரத்தை நாடுகிறோமா? நாம் ஞாபகத்தில் வைக்கவேண்டியது - இயேசுவின் உண்மையுள்ள சீஷர்களாக நாம் மாறுவதற்கு, அனைத்திலும் நாம் அவருக்கு முதல் இடம் தரவேண்டும், நம் தேவைகளை அவரே சந்திப்பார் என்று அவரை முழுமையாக நம்பவேண்டும். ஜெபம்: ஆண்டவரே, முதலாவது உம்முடைய ராஜ்யத்தையும் உமது நீதியையும் நான் தேடும்போது, உண்மை வெற்றி என் வாழ்வில் வரும் என்று அறிந்தேன். தற்காலிக காரியங்களைவிட, அனுதின வேதவாசிப்பு, ஜெபத்திற்கு நான் முதலிடம் தருவதற்கு எனக்கு நீர் உதவும்படி வேண்டுகிறேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments