top of page

வியாழன், ஜூன் 26 || கீழ்ப்படியாதவர்கள் பலியிடுவது மாய்மாலம்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jun 26
  • 1 min read


பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படித(லே) .. உத்தமம். இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்(துக்கு) சரி ... - 1 சாமுவேல் 15: 22,23


நமது ஆண்டவர் கிருபை நிறைந்தவர். சவுல் தன்னைத் திருத்திக்கொள்ள இன்னொரு சந்தர்ப்பத்தை அவனுக்குக் கொடுத்தார். 1 சாமுவேல் 15ல், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரிக்கும்படி கர்த்தர் சாமுவேல் மூலமாக சவுலுக்குக் கொடுத்த கட்டளையை நாம் வாசிக்கிறோம். ஏனெனில், யாத்திராகமம் 17:8-16ல், எகிப்திலிருந்து இஸ்ரவேலர் புறப்பட்டுவந்தபோது, அமலேக்கியர்கள் ரெவிதீமில் அவர்களுக்கு எதிராக வந்தனர். அவர்களை வானத்தின் கீழ் இராதபடி அழிக்க கர்த்தர் நினைத்தார் என்பதை உபாகமம் 25:19 கூறுகிறது. இப்போது சவுலும் அவர்களை முறியடித்தான். ஆனால், தெரிந்தே அவரது கட்டளையைப் புறக்கணித்தான். எப்படியெனில், அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே வைத்தான். நலமான எல்லாவற்றையும் அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்தான். சவுலோ, கீழ்ப்படியாமல் போன பாவத்தோடு பொய்யும் உரைத்தான் என்றும் நாம் வாசிக்கிறோம். 


சவுல் செய்ததைக் கேள்விப்பட்ட சாமுவேல் அவனைச் சந்திக்கச் சென்றான். அவனிடம் சவுல் கூறிய முதல் வார்த்தைகள்: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்பதே! சாமுவேலோ, அப்படியானால் ஆடுமாடுகளின் சத்தம் கேட்கிறதே என்றபோது, ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள். மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான் சவுல். ஆனால் சாமுவேல் அவனைப்பார்த்து, பில்லிசூனியப் பாவத்திற்கும், அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியான பாவத்தைப் பண்ணினாயே என்று கூறியதை 1 சாமுவேல் 15:23ல் வாசிக்கிறோம்.


அன்பானவர்களே, கர்த்தர் விரும்பும் பலி நருங்குண்டதும் நொருங்குண்டதுமான இருதயமே தவிர வேறல்ல. நமது கீழ்ப்படிதலே பலியிடுவதைப்பார்க்கிலும் உத்தமம். எனவே, நாம் சவுலைப்போல துணிகரமாக இரண்டகம் செய்யாமல் கவனமாக அவரது வார்த்தைக்கு முழுமையாகக் கீழ்ப்படிவோம். ஒரு பகுதியையும் விட்டுவிடாமலிருப்போம். 

ஜெபம்: தேவனே, எனது இருதய முரட்டாட்டத்தினிமித்தம் நான் அநேகமுறை உமது சித்தத்தை அறிந்திருந்தும் அதைப் புறக்கணித்து செயல்பட்டிருக்கிறேன். ஆயினும் திருத்திக்கொள்ள எனக்கு சந்தர்ப்பம் தருகிறீர். அதைப் பயன்படுத்தி உமக்கு முழுவதும் கீழ்ப்படிய எனக்கு கிருபை தாரும். ஆமென்.



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page