top of page

புதன், ஆகஸ்ட் 06 || நினிவேயா? தர்ஷீசா? - நாம் எங்கே போகிறோம்?

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Aug 6
  • 2 min read

Updated: Aug 6


வாசிக்க: யோனா 1: 1-3


... யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போ ... என்றார். - யோனா 1:1,2


யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி என்கிறது வசனம். இஸ்ரவேலிலுள்ள அநேக தீர்க்கதரிசிகளில் யாரோ ஒருவரைக் கர்த்தர் தெரிந்தெடுத்திருக்கலாம். ஆனால் அவரோ யோனாவைத் தெரிந்துகொண்டு,  பொறுப்பு கொடுக்க அவனில் நம்பிக்கை வைத்தார் - அந்தப் பொறுப்பு மிகப் பெரிய பொறுப்பாயிருந்தது! நீ எழுந்து ... நினிவேக்குப் போ என்று அவனிடம் கர்த்தர் சொன்னார். நினிவே என்ற வார்த்தையைக் கேட்டதும் யோனா அதிர்ச்சியடைந்தான்; காரணம், நினிவே மக்கள் கர்த்தருடைய ஜனங்கள் வெறுத்த, மிக கொடுமையான மக்களாய் இருந்தனர். யோனாவுக்குக் கர்த்தர் கட்டளையிட்ட உடனேயே, கீழ்ப்படியாமையைத் தொடங்கினான் யோனா. தர்ஷீசுக்குப் போகின்ற ஒரு கப்பலில் அவன் ஏறினான். யோனா செய்த பாவம், சொன்னதைச் செய்யாமலிருந்த பாவம்! தேவன் எதற்கு அழைத்தாரோ, அதை அவன் செய்யவில்லை. அழைப்பு தந்த பொறுப்புகளை விட்டு அவன் ஓடிப்போனான். வசனம் 3, கர்த்தருடைய சமுகத்தினின்று ஓடிப்போக முயற்சித்தான் யோனா என இரண்டு முறை கூறுகிறது. முடிந்தவரை மிகவும் அதிக தூரத்தை தனக்கும் கர்த்தருக்கும் இடையிலே வைக்க அவன் விரும்பினான். மிகவும் தூரமாய்ச் சென்று, கர்த்தரோடு உள்ள ஐக்கியத்திலிருந்தும், அவரது அருகாமையிலிருந்தும் விலக அவன் விரும்பினான். தேவனுடைய வீட்டிற்கு வர விரும்பாத கிறிஸ்தவர்கள், தேவனுடைய பிரசன்னத்திலிருந்து தங்களை மறைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆம் தேவபிரசன்னத்தை பாவம் விரும்புவதில்லை. நாம் ஆலயத்துக்கு செல்லுவதிலும், நமது தியான வாழ்க்கையிலுமே இது பிரதிபலிக்கப்படுகிறது. பாவம், கீழ்ப்படியாமை நம்மை மேலே கொண்டுவராது. அவை நம்மைக் கீழேதான் இழுக்கின்றன.  


அன்பானவர்களே, நினிவேவுக்குப் போகும்படி தேவன் நமக்குச் சொன்னாலும், நம்மிலே அநேகர் தர்ஷீசுக்கு போகின்ற கப்பலில்தான் இருக்கிறோம்! நாம் போவது எங்கே? கிறிஸ்தவ வாழ்விலே இரண்டே இரண்டு பாதைகள்தான் இருக்கின்றன - ஒன்று, நினிவேக்குப் போகும் பாதை - தேவனுக்கும், அவரது வார்த்தைக்கும் கீழ்ப்படிகின்ற பாதை; மற்றொன்று, தர்ஷீசுக்குப் போகும் பாதை - கீழ்ப்படியாமையின் பாதை. நாம் செல்லும் பாதை என்ன? தேவனுக்கு எதிரான நம் கலகத்தை இன்றே அறிக்கையிட்டு, அவரிடத்தில் திரும்புவோம். 

ஜெபம்: ஆண்டவரே, தான் தர்ஷீசுக்கு ஓடிப்போனால் நினிவேயை விட, உமது பிரசன்னத்தை விட வெகு தூரம் போய்விடலாம் என்று யோனா எண்ணியது மதியீனம். ஆனால், நீர் மீண்டும் அவனைப் பயன்படுத்துவதற்கு, நீர் அவனை அதிகம் சீர்ப்படுத்த வேண்டியிருந்தது. சிறிதோ பெரிதோ, எந்தக் காரியத்திலும் உமக்கு எதிராக நான் கலகம் செய்யாதபடிக்கு காத்துக்கொள்ளும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page