top of page

ஞாயிறு, மார்ச் 02. || கர்த்தர் கிருபையுள்ளவராயிருக்க விரும்புகிறார்

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Mar 2
  • 1 min read

கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். - சங்கீதம் 103:8


இயேசு உருக்கமும், இரக்கமும் நிறைந்தவர் என சுவிசேஷப் புத்தகங்களில் நாம் வாசிக்கிறோம். ஆனால், பழைய ஏற்பாட்டில் நாம் தேவனைப் பற்றி வாசிக்கையில் நம் மனதுக்கு வருவது என்ன? கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருப்பதால் இஸ்ரவேலர் செய்கின்ற தவற்றுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்குபவராக இருக்கிறார் என்று நினைக்கிறோம். சீனாய் மலை என்றால் இடிமுழக்கமும், நெருப்பும், தேவனுடைய கடிந்துகொள்ளுதலும் சீர்திருத்தலும், கீழ்ப்படியாதவர்கள்மேல் உள்ள அவரது கோபமும் நினைவிற்கு வரும். புகையும், மின்னலும், கல்மழையும் நினைவிற்கு வரும். ஆம்! அவர் சுட்டெரிக்கும் அக்கினியாயிருந்தாலும், பரம தகப்பனாகிய தேவன் இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ளவர் என்றும், ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கம் காண்பிக்கிறவர், அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவங்களையும் மன்னிக்கிறவர் என்றும் தமது ஜனங்களுக்கு வெளிப்படுத்தினார். (யாத்திராகமம் 34: 6,7) வனாந்தரத்தில் அழுதுகொண்டிருந்த ஆகாருக்கு இரங்கினார். அவரது சமுகத்தில் மனக்கிலேசத்துடன் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணின அன்னாளைக் கடாட்சித்தார். தனிமையிலிருந்த வயதுசென்றவளுமான நகோமியின் வேதனை நிறைந்த இருதயத்தை ஆறுதல்படுத்தினார்.


அன்பானவர்களே, விவரிக்கமுடியாத அன்பு நிறைந்தவர் நம் தகப்பன். நமக்கு கிருபை காட்டுவதற்கு அவர் ஏங்குகிறார்! நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத்தக்கதாக அவர் நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். (சங்கீதம் 103:10) உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார் என்று ஏசாயா 30:19 கூறுகிறது. ஆகையால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும் தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். (எபிரெயர் 4:16)  
ஜெபம்: பரம பிதாவே, சிலவேளை உருக்கத்தை, இரக்கத்தை உம்மோடு அல்ல, உமது குமாரன் இயேசுவோடு இணையாக்குவேன். இன்று வேதவசனத்தை நினைவுபடுத்தி, உம் அன்பும் பலமுறை வெளிப்படுவதை விளக்கினீர். நான் கிருபாசனத்தண்டை தைரியமாக வந்து, தயவுக்காக காத்திருப்பேன். ஆமென்.தெளிதேன் துளிகள்

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page