செவ்வாய், அக்டோபர் 07 || ஒரு சால்வை மாற்றப்படுகிறது
- Honey Drops for Every Soul
- Oct 7
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: 2 இராஜாக்கள் 2: 9-15
அதை எலிசா கண்டு: என் தகப்பனே, .. இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்... - 2 இராஜாக்கள் 2:12
பழைய ஏற்பாட்டிலே எலியா ஏறிப்போன சம்பவம் மிகவும் வியக்கத்தக்கது. சுழல்காற்றில் தன் ஆண்டவன் எலியா எடுத்துக்கொள்ளப்பட்டதைக் கண்டபோது, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான் எலிசா. இந்த வார்த்தைகள் பிரியாவிடை மட்டும் அல்ல, இவை எலியாவிடமிருந்த ஆவிக்குரிய வல்லமையை அங்கீகரிக்கின்ற வார்த்தைகள். இஸ்ரவேலின் உண்மையான பலம் அதனுடைய இராணுவத்தில் இல்லை, அது தேவனுக்கு முன் நின்று ஜெபிக்கும் மக்களிடத்தில் இருந்தது. எலியாவின் மன்றாட்டு ஜெபமும், கீழ்ப்படிதலும்தான், போர்வீரர்கள், ஆயுதங்களைக் காட்டிலும் தேசத்திற்கான பாதுகாவலாய் இருந்தது.
அன்பானவர்களே, இன்று இதிலே நமக்கிருக்கும் பாடம் மிகவும் அருமை! தேவனுடைய ஜனங்கள் ஆவிக்குரிய யுத்த வீரர்களாக அழைக்கப்பட்டிருக்கின்றனர்; உலக பலத்தைக் காட்டிலும் இவர்களுடைய ஜெபங்களும் உண்மைத்துவமுமே சபையின் பலமாக இருக்கிறது! நாம் சிலவேளை சமாளிக்கமுடியாத நிலைக்குள் வரலாம், ஆனால் தேவன் நம்மைத் தமது ஆவியினால் ஆயத்தப்படுத்தி நாம் அவரது ஊழியத்தில் தொடர உதவுகிறார். யாக்கோபு 5:17 நினைவூட்டுகிறபடி, எலியா நம்மைப்போன்ற மனுஷனாயிருந்தும் அவன் கருத்தாய் ஜெபித்தபோது கர்த்தர் வல்லமையாய்க் கிரியை செய்தார். மேலும் நாம் காண்பது, எலிசா விரக்தியில் நிலைத்திருக்கவில்லை. எலியாவின் சால்வையை அவன் எடுத்துக்கொண்டு, ஊழியத்தைத் தொடரும்படி புறப்பட்டுச் சென்றான்! இது, தேவ ஊழியத்தில் சாட்சியமின்றிப் போகாது; ஒரு ஊழியன் சென்றபிறகு அவனுடைய இடத்தில் வேறொருவன் எழும்பி, ஊழியத்தைத் தொடருவான் என்பதைக் காட்டுகிறது. எப்படிப்பட்ட பாத்திரமாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல; தேவனே அவருடைய ஊழியர்களை வல்லமைப்படுத்துகிறார்! எலியாவை, எலிசாவை வல்லமைப்படுத்திய அதே ஆவியானவர் இன்று நம்மோடு இருக்கிறார். நமது யுத்தங்களில் இரதமும் இராணுவமும் இல்லாதிருக்கலாம், ஆனால் நமது உறுதியான ஜெபமும் நம்பிக்கையுமே நம்மைத் தேவனுடைய பிள்ளைகளின் பாதுகாப்பாய் மாற்றும்.
ஜெபம்: ஆண்டவரே, எலியா எலிசாவைப்போல என்னையும் உண்மையுள்ள ஊழியக்காரனாய் மாற்றும்; அவர்களுடைய பலம் மனுஷ வல்லமையிலல்ல, உம் ஆவியிலே இருந்தது. ஜெபத்திலும் விசுவாசத்திலும் நான் நிற்க உதவும்; நான் உம்முடன் நடப்பதால் மற்றவர்கள் பலப்பட உதவும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177
Comments