வெள்ளி, ஜூன் 13 || உன்னிடம் என்ன இருக்கிறது?
- Honey Drops for Every Soul

- Jun 13
- 1 min read
வாசிக்க: 2 இராஜாக்கள் 4:1-7
நீங்கள் ... உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள் ...
- எபிரெயர் 13:5
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று நம் ஆண்டவர் சொல்லியிருக்கிறார். எனவே, உங்களுக்கு இருப்பது போதுமென்று எண்ணுங்கள். இன்று உங்களிடத்தில் இருப்பது எது? ஐசுவரியமா? புகழா? படிப்பா? அழகா? சமுதாய அந்தஸ்தா? ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு உங்களிடம் இருக்கிறாரா என்று பாருங்கள். ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள். அவர் நம்மிடம் இருந்தால் போதும். நமக்கு இருப்பதே போதுமானதாகிவிடும். மோசேயிடம் இருந்ததெல்லாம் ஒரே ஒரு மேய்ப்பனின் கோல்தான். கர்த்தர் அவனோடு இருந்ததால் மோசே தைரியமாக அந்தக் கோலை செங்கடலின்மீது நீட்டினான். என்ன ஆச்சரியம்! செங்கடல் இரண்டாகப் பிளந்து இஸ்ரவேலருக்கு வழிவிட்டது! சாரிபாத் விதவையிடம் இருந்ததெல்லாம் ஒருபிடி மாவும் கொஞ்சம் எண்ணையும்தான். அது ஒருவேளை உணவுக்குப் போதுமானது. அவ்வளவுதான். ஆனால், அவள் தீர்க்கதிரிசியின் வார்த்தையை நம்பி செயல்பட்டபோது, பஞ்சகாலம் முடிகிறவரையிலும், அது அவளுக்கும் அவளோடு இருந்தவர்களுக்கும் போதுமானதாக மாறிப்போயிற்று! அந்திரேயா அழைத்துவந்த அந்த சிறுவனிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு சிறிய மீன்கள் மாத்திரமே இருந்தன. ஆனால் அங்கே இயேசு இருந்தார். எனவே, அது ஐயாயிரம் புருஷருக்கும் அவர்களது மனைவிகளுக்கும் பிள்ளைகளுக்கும் போதுமானதாக இருந்தது. மிகுதியானது பன்னிரண்டு கூடைகளில் சேர்க்கப்பட்டது.
அன்பானவர்களே, நம் ஆண்டவர் அற்புதம் செய்பவர். அவர் நம்மோடிருந்தால் நமக்கிருப்பவைகள், எவ்வளவுதான் குறைவானதாக இருந்தாலும், அவை நமக்கு நிச்சயம் போதும். இன்று நாம் உறுதி செய்துகொள்ளவேண்டியது நமக்கு வேண்டியது இருக்கிறதா என்பதல்ல; அவர் நம்மோடிருக்கிறாரா என்பது மட்டுமே! ஜெபம்: தேவனே, மற்றவர்களிடம் இருப்பது என்னிடம் இல்லையே என்று பலமுறை ஏங்கியுள்ளேன். ஆனால், என்னிடம் உள்ளவைகளை உம்மிடத்தில் நான் கொடுத்தால் அவைகளைக்கொண்டு நீர் அற்புதம் செய்வீர் என அறிந்தேன். எது இருக்கிறதோ இல்லையோ நீர் மாத்திரம் என்னோடிரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments